http://temple.dinamalar.com/news_detail.php?id=40278
பள்ளிபாளையம் அருகே 2வது நாளாக பதற்றம் திருவிழாவில் இருதரப்பினர் மோதல் கோயிலுக்கு பூட்டு: ஆர்டிஓ நடவடிக்கை
3/11/2017 10:59:37 AM
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே ரங்கனூர் கோயிலில்
மாவிளக்கு பூஜையின்போது இருதரப்பினர் மோதிக்கொண்ட விவகாரத்தில் 12 பேர்களை
போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோயில் பூட்டப்பட்டு, ஆர்டிஓ
விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பள்ளிபாளையம் அருகே வெப்படை ரங்கனூர்
விநாயகர் கோயில் திருவிழா ஆண்டு தோறும் விமர்சையாக நடக்கும். இக்கோயில்
விழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து
வருகிறது. இதனிடையே இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.
அப்போது ஒரு தரப்பினர் மேளதாளத்துடன் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
இதை மற்றொரு தரப்பினர் தடுத்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு,
இருதரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். சம்பவ இடத்திற்கு
விரைந்த போலீசார், இருதரப்பினரையும் துரத்தியடித்தனர். இதில் காயம் அடைந்த
சிலரை போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலையிலிருந்து கோயில் வளாகத்தில்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக
இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், மாவிளக்கு எடுத்து வந்த ஒரு தரப்பை
சேர்ந்த 4 பேரும், மற்றொரு தரப்பை சேர்ந்த 8 பேரும் என 12 பேரை போலீசார்
நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை, திருச்செங்கோடு மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் நேற்று போலீசாரின் பாதுகாப்போடு
சுவாமிக்கு மறுபூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் வைத்திருந்த மாவிளக்கு
மற்றும் பொங்கல் பானைகளை, சம்பந்தப்பட்டவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
பின்னர் முக்கிய பிரமுகர்களை அழைத்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் சமரசத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும்
இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து
போலீசார் கோயிலை பூட்டி, ஊர்பிரமுகர்களிடம் சாவியை ஒப்படைத்தனர். இந்த
மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை
நடத்தும்படி, திருச்செங்கோடு ஆர்டிஓவுக்கு போலீசார் பரிந்துரைத்தனர். 2வது
நாளான நேற்றும் அங்கு தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது. மோதல்
ஏற்படுவதை தடுக்க, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் விழாவில் மோதல்: 12 பேர் அதிரடி கைது
மார் 11, 2017 07:38
http://www.dinamalar.com/news_detail.asp?id=1728228பள்ளிபாளையம்: ரங்கனூர் பகுதியில், கோவில்
திருவிழாவின்போது, இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில், 12 பேரை போலீசார்
கைது செய்தனர். பள்ளிபாளையம் அடுத்த, ரங்கனூரில் பிள்ளையார் கோவில் உள்ளது.
இங்கு, ஆண்டுதோறும், மாசி திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு விழா,
நேற்று முன்தினம் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஒரு பிரிவினர் மாவிளக்கு
பூஜை நடத்தினர். இதற்கு, மற்றொரு பிரிவினர் எதிரிப்பு தெரிவித்தனர்.
இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் அடித்துக்
கொண்டனர். இதுகுறித்து, இரு பிரிவினரும் பள்ளிபாளையம் போலீசில் புகார்
செய்தனர். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 12 பேரை கைது
செய்தனர்.
கோவில் விழாவில் பங்கேற்று ஸ்வாமி வழிபாடு செய்ய கலெக்டரிடம் மனு
Added : பிப் 25, 2015 08:14
நாமக்கல் : "ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதுடன்,
கோவில் திருவிழாவில் பங்கேற்ற அனுமதி மறுத்துள்ளனர். அவற்றை நீக்கி,
ஸ்வாமி வழிபாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ரங்கனூர் கிராம
மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.அந்த
மனுவில் கூறியிருப்பதாவது:பள்ளிபாளையம் அடுத்த, எலந்தகுட்டை பஞ்சாயத்துக்கு
உட்பட்ட ரங்கனூர் கிராமத்தில், தொண்டு வேளாளர், போயர், நாயக்கர் சமூகத்தை
சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். போயர் சமூகத்தை சேர்ந்த விஜயகுமார்,
தொண்டு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து
திருமணம் செய்து கொண்டார்.இதையடுத்து, போயர் சமுதாயத்தை ஊரை விட்டு தள்ளி
வைத்து விட்டனர். அதனால், காலம் காலமாக பொங்கல், மாவிளக்கு எடுத்துச் சென்ற
வழிபாடு நடத்தி வந்த எங்களை கோவிலுக்கு வரக்கூடாது என தடுத்தும்,
மிரட்டியும் வருகின்றனர்.அதேபோல் மயானத்திலும், எங்கள் சமூகத்தில் யாராவது
இறந்தால், அவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என தடுக்கின்றனர். அதில்,
ஒரு சிலர் ஜாதிமோதலை தூண்டும் வகையில் நடந்து கொள்கின்றனர். அவர்கள்
சமூகத்தை சேர்ந்தவர்கள், 100 குடும்பத்தினர் உள்ளனர். ஆனால், போயர்
சமூகத்தில், 18 குடும்பங்கள் மட்டுமே வசிக்கிறோம். இதை தங்களுக்கு சாதகமாக
பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர்களை வைத்து மிரட்டல்
விடுகின்றனர்.அவர்களின்ல் அடாவடியால், எங்களுக்கு எவ்வித பாதுகாப்புக்கும்
உத்திரவாதம் இல்லாத சூழ்நிலையே நீடித்து வருகிறது. வரும் மார்ச், 5ம் தேதி
திருவிழா துவங்குகிறது. அவ்விழாவில், நாங்களும் கலந்து கொண்டு, பொங்கல்,
மாவிளக்கு எடுத்துச் சென்று ஸ்வாமியை வழிபாடு செய்வதற்கும், எங்களை
மிரட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.